வருமான வரித்துறை ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் முதல் மாடியிலிருந்து குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தமிழகம், கர்நாடகத்தில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில், தொடர்ந்து 2 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.
குமாரசாமி என்பவரால் நடத்தப்படும் கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் என்ற நிறுவனம் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு தேவையான முட்டைகளை விநியோகித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள குமாரசாமியின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர். குமாரசாமியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ஜெயப்பிரகாஷ் என்பவரின் அக்னி பில்டர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
அதன் பின்பு நேற்று மாலை அந்த நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயனை, கிறிஸ்டி மில் பின்புறம் உள்ள SKP நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு மயக்கம் வருவதாக கூறி விட்டு வெளியே வந்த கார்த்திகேயன் திடீரென முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த வருமான துறை அதிகாரிகள் கார்த்திகேயனை சிகிச்சைக்காக விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதித்தனர்.மாடியிலிருந்து விழுந்ததில் கார்த்திகேயனுக்கு முதுகு எலும்பில் அடிபட்டிருப்பதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஐடி ரெய்டுக்கு பயந்து கார்த்திகேயன் இத்தகைய செயலில் ஈடுப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.