சினிமா டிக்கெட் விலைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, விரைவில் புதிய படங்கள் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.
சினிமா டிக்கெட் விலை உயர்வு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி ஷாக்! தமிழக அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்புக்கு காரணம் ஜி.எஸ்.டி.! ஜி.எஸ்.டி.யாக 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ள சினிமா டிக்கெட்டிற்கு 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள டிக்கெட்டிற்கு 28 சதவீத வரியும் விதித்தது மத்திய அரசு.
இந்த வரியே சுமையாக இருப்பதாக சினிமாக்காரர்கள் கூறிவந்த நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், 10 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டது.
‘ஏற்கெனவே ஜி.எஸ்.டி.யால் அவதிப்பட்டு வரும் எங்களுக்கு, இந்த வரி கூடுதல் சுமை’ என இதற்கும் சம்மதிக்காமல் கொடிபிடித்தனர் சினிமாக்காரர்கள். அதனால், கடந்த 6ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல், ஏற்கெனவே ரிலீஸ் ஆன படங்களையே ஓட்டி வந்தனர். எனவே, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாக வேண்டிய ‘விழித்திரு’, ‘களத்தூர் கிராமம்’, ‘திட்டிவாசல்’ உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸாகவில்லை. மேலும், 5ஆம் தேதியே ரிலீஸான துல்கர் சல்மானின் ‘சோலோ’ படமும், 6ஆம் தேதியில் இருந்து நிறுத்தப்பட்டது.
விரைவில் தீபாவளி வருவதை முன்னிட்டு, இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய சூழ்நிலை சினிமாக்காரர்களுக்கு ஏற்பட்டது. முக்கியமாக, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நாயகனான விஜய்யின் ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அதற்குள் பிரச்னைக்குத் தீர்வுகாண, அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கேளிக்கை வரியை விலக்கிக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அரசு, டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தது.
அதன்படி, தற்போது 154 ரூபாயாக உள்ள டிக்கெட் மல்ட்டிபிளெக்ஸில் 220 ரூபாயாகவும், மல்ட்டிபிளெக்ஸ் அல்லாத தியேட்டர்களில் 193 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே ஆன்லைனில் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ராவாக செலுத்த வேண்டும். இதற்கான ஆவணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் தியேட்டர் ஓனர்களுக்கு வந்துவிடும். அதன்பிறகு புதிய டிக்கெட் விலை அறிமுகப்படுத்தப்படும் என்கிறார்கள் தியேட்டர் ஓனர்கள்.
டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட பிறகு, உள்ளாட்சி கேளிக்கை வரியைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்கள் ரிலீஸாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன் வேறு புதிய படங்கள் ரிலீஸாகுமா இல்லை நேரடியாக தீபாவளிப் படங்கள்தான் ரிலீஸாகுமா என்பது தெரியவில்லை. சினிமா ரசிகர்களை இந்த தீபாவளி தித்திக்க வைக்குமா? என்பது விரைவில் தெரியும்.