ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளதாக சி.ஐ.டி.யு., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் இதுகுறித்து, "தமழ்நாட்டில் போக்கு வரத்துக்கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதிநெருக்கடியில் இருந்துவருகின்றன. பஸ் மூலம் உத்தேசமாக ரூ.100 வசூலானால் அதில் ரூ.12-ஐ வங்கியில் இருந்து பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது.
தினமும் ஒரு கோடி கி.மீ இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது 80 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்படுகின்றன அதுமட்டுமின்றி ஏராளமான வழித்தடங்களில் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளன என்றார்.
மேலும் பஸ் எண்ணிக்கையைக் குறைப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணைகளை தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பணியில் இருந்து ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, ஓய்வு பெறும் அன்றே ஓய்வு கால பலன் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதுடன் காலிப் பணியிடங்களைப் நிரப்புதல், வாரிசு வேலை வழங்குதல் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றும் கூறினார்.