/tamil-ie/media/media_files/uploads/2018/05/s154.jpg)
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி, மதிமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்றனர். அவர்களை வரவேற்பதற்காக இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். விமான நிலையம் வந்திறங்கிய வைகோ, காரில் ஏறி தஞ்சை புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் சீமான் தனது காரில் கிளம்பிய போது, மதிமுக தொண்டர்களை விலகுமாறு நாம் தமிழர் கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் - மதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இரு கட்சிகளின் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கத் தொடங்கினர். கைகளில் வைத்திருந்த கட்சிக் கொடி கம்புகளை வைத்து அடித்துக் கொண்டனர்.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் காவல்துறையினர் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மோதல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு சென்றார்.
இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களின் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி செலுத்த சென்ற போது, மதிமுக - நாம் தமிழர் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.