முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ புயல் டெல்டா பகுதிகளில் கோர தாண்டவம் ஆடிவிட்டது. பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் அழிந்து சர்வ நாசமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து நிவாராணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்கச் சென்ற முதல்வர் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மட்டும் சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.
முதல்வர் பிரதமர் சந்திப்பு : கஜ நிவாரண நிதியாக ரூபாய் 15,000 கோடி கேட்டார்
தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினை விட அதிக அளவு பாதிப்பினை இந்த புயல் உருவாக்கியுள்ளது. கஜவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்ப நிச்சயம் ஒரு மாதத்திற்கும் மேலாகும்.
கஜ புயல் நிவாரண நிதியாக 15,000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசினை வலியுறுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று பேசினர்.
பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு இல்லம் சென்றார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியுடன் தமிழக தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதனும் சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு முதல்வர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது ஏற்கனவே வெளியான தகவல்களை விட கூடுதல் நிதி, அதாவது மொத்தம் ரூ15,000 கோடி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், ‘கஜ புயலுக்கு 62 பேர் பலியாகியிருக்கிறார்கள். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. முதல்கட்டமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை வைத்திருக்கிறேன். மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதி கூறினார்’ என்றார் முதல்வர். மேலும் கஜ பாதிப்பை, தேசிய பேரழிவாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்திருப்பதாக முதல்வர் கூறினார்.
மேலும் படிக்க : தொடரும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை