அதிமுக கண்டன பொதுக்கூட்டம்: இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, "இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும்.
திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. அதிமுக ஜனநாயக கட்சி. அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும். உழைக்கப் பிறந்தவர்கள் அதிமுகவினர். மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல. அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும்.
உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா?
முதலமைச்சர் கனவுல ஸ்டாலின் மிதந்துக்கிட்டு இருக்காரு. கடைசி வரைக்கும் அவரால முதல்வராகவே முடியாது. நீங்கள் உங்கள் தந்தை அமைத்து கொடுத்த வழியில் வந்துள்ளீர்கள். நாங்கள் கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்து உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கோம். நான் கொல்லைப்புறமா வந்தேனா?.. நீங்கள் வந்தீர்கள்? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.