டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு 2 நாள் பயணமாக விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
நேற்று (ஜனவரி 18) பிற்பகல் 3 மணிக்கு டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி, இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி இன்று (ஜனவரி 19) காலை பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்களை அளித்துள்ளேன். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை சீரமைப்புத் திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடியும் தமிழகம் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளார்.
புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க போதிய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். நல்ல சாலைகளை அமைத்துக் கொடுத்திருப்பதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். எனது கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜனவரி 27ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். அவர் விடுதலையானால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? அவர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா.” என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது அரசியல் பற்றி விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை” என்று கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Cm edappadi k palaniswami says no chance to sasikala to join with aiadmk