உயர் கல்விக்காக வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்தவர் சரத் பிரபு. இவர் டெல்லியில் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவமனையில் எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் சரத் பிரபு இன்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சரத் பிரபு உடலை மீட்டனர்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு தற்கொலை செய்து கொண்டதாகவே கருதுகிறோம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஊசி மூலம் பொட்டஷியம் குளோரைடை செலுத்தி சரத்பிரபு தற்கொலை செய்து இருக்கலாம். சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்ட கழிவறையில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கழிவறைக்கு வெளியே பொட்டாஷியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், திருப்பூர் மாணவரின் மரணம் குறித்து பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், தமிழக அரசிடம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். ஆனால், மாணவர்கள் பலர் பதிவு செய்வதில்லை. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இருப்பினும், உயர் கல்விக்காக வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.