தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலர் சாய்குமார் உள்ளிட்டோரும் ஆளுநர் சந்திப்பில் இடம் பெற்றனர்.
Advertisment
கொரோனா பெருந்தொற்று, சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம், 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரிடம் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்தித்து பேசினார்.
— AIR News Chennai (@airnews_Chennai) July 4, 2020
Advertisment
Advertisements
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 65,000க்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1033ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், 6 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றிய சிபிசிஐடி, தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை அடிப்படையில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, உறவினர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு, அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil