/indian-express-tamil/media/media_files/2024/11/04/PkdvHyXKGs6YWIxyUfV3.jpg)
முதலமைச்சர் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செவ்வாய்க்கிழமை கோவை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் நாளை 5 ஆம் தேதி விளாங்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட ஐ.டி பார்க் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகை தயாரிப்பு தொழில் குறித்தும், அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனை அடுத்து, போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க நிர்வாகிகளுடன் சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை மறுநாள் புதன்கிழமை 6 ஆம் தேதி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் 6.9 ஏக்கரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த நூலகம் ஏழு தளங்களில் அமைய உள்ளது. இதனை அடுத்து மதியம் விமானம் மூலம் முதலமைச்சர் கோவையிலிருந்து சென்னை செல்கிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
மேலும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா இடமான சிறைச்சாலை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.