கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து சர்வதேச ஆய்வகங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தும் மேலும் மேலும் ஆதாரம் வேண்டும் என ஒன்றிய அரசு கேட்கிறது. ஆனால், ஆதாரம் இல்லாத புராணம் சார்ந்த சரஸ்வதி நாகரிகத்தை பா.ஜ.க ஆதரிக்கிறது என்றும் தமிழ் வரலாற்றை அழிக்க பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்த கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் சர்வதேச ஆய்வகங்களில் இருந்து பெறப்பட்ட ஆக்சிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) அறிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்தும், "மேலும் ஆதாரம்" கோருகிறார்கள். இதோ "ஆதாரம்".
ஆனால், இதற்கு மாறாக, மரியாதைக்குரிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பா.ஜ.க புராண சரஸ்வதி நாகரிகத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. நம்பகமான ஆதாரம் இல்லாமல் இதைச் செய்கிறார்கள், அதே நேரத்தில் தமிழ் கலாச்சாரத்தின் துல்லியமாக நிரூபிக்கப்பட்ட தொன்மையை நிராகரிக்கிறார்கள்.
கீழடி மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் நீடித்த உண்மை என்று வரும்போது, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்வாங்குகிறது - ஆதாரம் இல்லாததால் அல்ல, ஆனால், உண்மை அவர்களின் திட்டத்திற்கு ஒத்துப்போகாததால்தான்.
நூற்றாண்டுகள் போராடி நமது வரலாற்றை வெளிக்கொண்டு வந்துள்ளோம். அந்த வரலாற்றை அழிக்க அவர்கள் தினமும் போராடுகிறார்கள்.
உலகமும் காலமும் உற்றுநோக்கி வருகிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்யக் கோரியது. ஆனால், கீழடியில் முதல் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், அவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான சான்றுகளுடன் சமர்பிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையைத் திருத்த முடியாது என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின்ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடரவிரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில்தான், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து சர்வதேச ஆய்வகங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தும் மேலும் மேலும் ஆதாரம் வேண்டும் என ஒன்றிய அரசு கேட்கிறது. ஆனால், ஆதாரம் இல்லாத புராணம் சார்ந்த சரஸ்வதி நாகரிகத்தை பா.ஜ.க ஆதரிக்கிறது என்றும் தமிழ் வரலாற்றை அழிக்க பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.