‘செய்திகளை படிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், “வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே, அது தான் அரைவேக்காட்டுத்தனம்” என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில், ரூ.325 கோடியே 96 இலட்சம் செலவில் 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தினமும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
தனது உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைப்பதற்காக தினமும் அறிக்கை வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார் பழனிசாமி. இந்த அறிக்கையையாவது, உண்மையான நிலவரங்களை தெரிந்து கொண்டு வெளியிடுகிறாரா? என்றால் அதுவும் இல்லை. ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்று கேட்கிறார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 100 வது நாளில் 32,000 பேருக்கு பட்டா, 30,000 பேருக்கு ஓய்வூதியம்,10,000 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசு சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. பத்திரிகை, TV செய்திகளில் வருகிறது. சமூக ஊடகங்களில் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே, அது தான் அரைவேக்காட்டுத்தனம்” என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “
தி.மு.க. ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா ஸ்டாலின் அவர்களே?
ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே - அது தான் அரைவேக்காட்டுத்தனம்!
தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே - இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே? மீத்தேன் - ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப்படுத்தவில்லை!
நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதல்-அமைச்சர்! "நாட்டில் மும்மாரி பொழிகிறது - எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!
நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில்தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்? எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.
உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத்தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் ஸ்டாலின்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.