தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைததள பதிவில் கூறியிருப்பதாவது: “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.