/indian-express-tamil/media/media_files/2025/08/17/cm-mk-stalin-rn-ravi-2025-08-17-13-03-03.jpg)
“ஆளுநர் ஆர்.என். ரவி கம்பு சுற்ற வேண்டியது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்லை.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை காட்டமாக விமர்சித்துள்ளார்.
“நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால் ஆளுநர் எரிச்சலில் கொட்டித் தீர்க்கிறார்” என்றும் “ஆளுநர் மூலம் தனது இழிவான அரசியலை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்து வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி கம்பு சுற்ற வேண்டியது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்லை.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை காட்டமாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரியில் தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவிற்கான திசைக்காட்டி திராவிட மாடல். ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்புகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ளாமல் பொய்களை மேடைதோறும் ஆளுநர் புலம்பி வருகிறார்.
தி.மு.க ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி, திராவிடத்தை பழிப்பார் ஆளுநர் ரவி. நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால் ஆளுநர் எரிச்சலில் கொட்டித் தீர்க்கிறார். ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் தரமாட்டார்; இல்லாத திருக்குறளை எழுதி கொடுப்பார். ஆளுநர் மூலம் தனது இழிவான அரசியலை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்து வருகிறது.
ஆளுநர் ஆர்.என். ரவி, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்லை. அங்கே போய் கம்பு சுற்றுங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம்தான் முதலில் உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில், ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பது தான் நமக்கு நல்லது. தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரமே கூறுகிறது. பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் 2-ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை ஆளுநர் விமர்சிக்கிறார். தமிழக மாணவர்களை இழிப்படுத்துகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தி.மு.க ஆட்சிக்கு வந்து 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 சேமித்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.
முன்னதாக தருமபுரியில் அரசு விழாவில் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.