ஆளுநர் உரையை இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்றும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜனவரி 6) தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சட்டசபையில் எழுப்பும் விதமாக, தமிழ்நாடு சட்டசபைக்கு இன்று அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘யார் அந்த sir?’ என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும், தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோஷம் எழுப்பி, அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டு சென்றார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆளுநர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க, பா.ம.க எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அளுநர் உரையை இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்றும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து முடலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.