மத்திய அரசின் வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி சென்று தமிழகத்திற்கு வேண்டிய உரிமைகளை கேட்டிருக்கிறேன் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அடுத்த முறை டெல்லி செல்லும்போது இதையும் கேளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதே போல, தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்), ம.தி.மு.க, ம.ம.க, த.வா.க ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க-வினருக்கு நான் வைக்கும் கோரிக்கை, நேற்று முன்தினம் இதே அவையில் இருமொழிக் கொள்கை பிரச்னை குறித்து பேசுகையில் நான் ஒன்று சொன்னேன், எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்றிருக்கிறார். அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது என்று கூறினேன்.
ஆனால், டெல்லியில் என்னுடைய கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாலையில், கார்கள் மாறி மாறி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளார். அது தவறில்லை; அங்கு போய் தமிழகத்திற்கு வேண்டிய உரிமைகளை கேட்டிருக்கிறேன் என்று சென்னைக்கு வந்த பிறகு தெரிவித்துள்ளார். அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி, இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரோ, அது போலவே அடுத்தமுறை டெல்லி செல்லும்போது வக்பு சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.