அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்றார்கள். 20 தொகுதி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற்றால் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வாக்குச்சாவடி முகவர்களையும் அ.தி.மு.க. தயார் நிலையில் வைத்திருப்பதால் தேர்தல் தேதியை எப்போது அறிவித்தாலும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகளிடையே பேசிய முதல்வர் பழனிசாமி, "ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோம். உங்கள் முழு உழைப்பையும் இந்த 20 தொகுதிக்கு கொடுங்கள். வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் என்றும் அதிமுக அலை மட்டுமே. அதுவே தமிழகத்தின் நிலை. வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அ.தி.மு.க பலமாக உள்ளது. பலமில்லாதவர்கள் தான் கூட்டு சேர்ந்து வருவார்கள். 20 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பரப்புரை 15ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.