பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேனர்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தேவரின் ஆன்மீக விழாவும் 2-ம் நாளில் அரசியல் விழாவும் நடைபெற்றது.
3-வது நாளான இன்று (30-ந் தேதி) குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.
தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தீவிர அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.
இந்த நிலையில், இவ்விழாவிற்காக சாலை முழுவதும் வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களின் பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர், துணை முதல்வர் என பாகுபாடின்றி, பேனர்கள் கிழித்து தொங்க விடப்பட்டுள்ளன. இதனை, அந்த விழாவிற்கு சென்றிருந்த மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.