சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுமென முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தன்னார்வளர்கள் சார்பிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் 100 உணவு தயாரிப்பு கூடங்கள் மூலமாக இன்று காலை வரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இன்று மற்றும் நாளை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுமென முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர் காலங்களில் ஏழை, எளியோர் முதல் பலதரப்பட்ட மக்களுக்கு உணவு கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவது தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சரின் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“