/indian-express-tamil/media/media_files/2025/10/17/murder-of-honour-killing-2025-10-17-13-10-53.jpg)
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) தலைமையில் ஆணையம்: ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகள் (Honour Killings) விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றுவியல் அறிஞர்கள் இடம்பெறுவார்கள். இந்த ஆணையம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை பெற்று, ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தேவையான உறுதியான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும். ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தச் சமூகக் கொடுமையைத் தடுப்பதற்கெனத் தமிழக அரசு உறுதியான புதிய சட்டங்களை இயற்றும் என்றும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
முதலமைச்சரின் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆணவப் படுகொலைகள் குறித்த விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், நாகரீக சமூகம் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. அது ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் சரி என்று முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
உலகம் அறிவு மயமாகிறது, ஆனால் அன்பு மயமாவது தடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். மேலும், சாதிய ரீதியான பாகுபாடுகளை குறைக்க தாம் எடுத்த நடவடிக்கை ஒன்றையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். சமூகங்களின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் எனப் பிரதமரைச் சந்தித்தபோது நான் கோரிக்கையை முன்வைத்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் நம் அனைவரின் கடமை. சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாழும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.