/indian-express-tamil/media/media_files/2025/04/08/MXfRN5KJl61CeO66if66.jpg)
தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாவிற்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, அவர் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை கிடப்பில் போடுவதாகவும், துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று (ஏப்ரல் 8) வழங்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாவிற்கு அனுமதி வழங்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். மேலும், குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். ஆனால், தான் நிறுத்தி வைத்திருப்பதாக கூறும் மசோதா செல்லாது என்று சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை" என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், "சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடாது என்பதே விதி. ஆளுநருக்குத் தன்னிச்சையான வீட்டோ அதிகாரம் இல்லை" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது செல்லாது. உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இது தவிர ஆளுநரின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, "ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்துகொள்ளவில்லை. விதிகள் அடிப்படையில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார். பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின் படியே செயல்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவு அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவை ஆளுநர் ஒரு மாதத்தில் எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதற்கான முடிவை மூன்று மாதங்களில் ஆளுநர் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புகளின் எதிரொலியாக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேந்தர் ஆகியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.