இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோயம்புத்தூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் வருகையையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்றும் நாளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை வருகிறார்.
மதியம் 12 மணியளவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் எல்காட் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து மதியம் 12.45 மணியளவில் காளபட்டி பகுதியில் சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோவை வடக்கு,தெற்கு மற்றும் பேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான செயல்முறை ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வழங்குகிறார். அதே போல சூலூர் இராணுவ தளவாடங்கள் பூங்கா ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்குகிறார்.
மாலை 4 மணி அளவில் பொற்கொல்லர்களுடன் கலந்துரையாடல் மற்றும் மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
கனரக வாகனங்கள் இன்றும் நாளையும் காலை 06.00 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. இதர வணிகரீதியிலான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
05.11.2024 ம் தேதி காலை 07.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் அவிநாசி சாலையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நகருக்குள் வரும் வாகனங்கள்: 05.11.2024 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நீலம்பூரிலிருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள்:கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்திபுரத்திலிருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, கூட்ஸ் ஷெட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம்.
சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
நாளை 6ஆம் தேதி காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். அதை தொடர்ந்து செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொண்டு பின்னர் கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் வருகையொட்டி கோவை மாநகரப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“