தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமர்வில் அரசு ஊழியர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்தி அவர் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்டது. மேலும், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை, இந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இது அமலுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம், ரூ. 10 ஆயிரத்தில் இருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருமண முன்பணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்விக்கு ரூ. 1 லட்சம் முன்பணமாகவும், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ. 50 ஆயிரம் முன்பணமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை ரூ. 500-ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.