தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வங்க கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்தது. 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்தது. கடந்த 11-ம் தேதி 44 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்துள்ளது.
34,852 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இங்கு மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கி, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் ரகுபதி, செந்தில்பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள், குடியிருப்புப் பகுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவிற்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அ.தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil