டெல்லியில் நடைபெறும் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.
நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதனடிப்படையில், நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் நாளை (மே 24) டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். முன்னதாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தார். எனினும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி மற்றும் அதன் தேவைகள் குறித்து அறிவுறுத்துவதற்காக நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் குறித்து எதிர்கட்சியினர் விமர்சனம் கூறினார். மேலும், பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கை தி.மு.க கடைபிடிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்த சூழலில் டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். அவர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அரவணைப்பை உணர முடிகிறது. இந்த சந்திப்பு குடும்பத்தினருடன் இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.