/indian-express-tamil/media/media_files/2025/10/09/bridge-2025-10-09-12-41-40.jpg)
புகைப்படம்: எக்ஸ்
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட, பிரமாண்டமான கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம், இன்று (அக்டோபர் 9) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர், நாட்டின் முதல் உலக புத்தொழில் மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.
ஜி.டி. நாயுடு பெயரில் தமிழகத்தின் முதல் நீளமான பாலம் திறப்பு:
கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. நீளம் கொண்டது. இதன் மூலம், தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் என்ற பெருமையை இது பெறுகிறது. இது மதுரை நத்தம் மேம்பாலத்தின் 7.3 கி.மீ. நீளத்தை மிஞ்சியுள்ளதுடன், இந்தியாவின் மூன்றாவது பெரிய தரை வழிப் பாலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேம்பாலத்திற்கு, கோவையின் பெருமைக்குரிய விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோர் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி, அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பின் விளைவாக விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. நகரில் இருந்து விமான நிலையம் செல்ல வழக்கமாக எடுக்கும் 45 நிமிட பயண நேரம், இந்த பாலம் திறக்கப்பட்டதன் மூலம் 10 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய நெரிசல் மிகுந்த சந்திப்புகளுக்கு இனி விடிவுகாலம் பிறந்துள்ளது.
இது நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலமாகவும், ஆறு வழித்தடத்துடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட தரை வழிச் சாலையாகவும் என மொத்தம் பத்து வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி போன்ற பகுதிகளுக்கும் விரைவாக செல்ல முடியும். விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை ஆகிய நான்கு இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த மேம்பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோலர் தடுப்புக் கருவிகள் உள்ளிட்ட உலகத் தரமான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
உலக புத்தொழில் மாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்:
பாலம் திறப்பு விழாவுக்குப் பிறகு, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தை உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துதல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக, நாட்டிலேயே முதல் முறையாக இந்த புத்தொழில் மாநாடு கோவையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் உட்பட 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் 15 அரசு துறைகள் இதில் பங்கேற்றனர்.
வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு, இரண்டு நாட்களும் 11 அமர்வுகளில் உரை மற்றும் விவாதங்கள் நடந்தனர். மாநாட்டைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.