அமித்ஷா மட்டுமல்ல எந்த 'ஷா' வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அப்போது, "சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால், பிரச்சனையை திசை திருப்ப நாம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறினார்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. மாநிலங்களின் உரிமையை கேட்பது தவறா? மத்திய அரசு எதுவும் செய்யாத காரணத்தினால் தான், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம்.
தி.மு.க-வின் போர் என்னவென்று தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைவரும் தெரிந்து கொண்டனர். இது தான் தி.மு.க-வின் பவர். திசை காட்டிகளாக இருக்கும் எங்களை பார்த்து புலம்ப வேண்டாம்.
நீட் தேர்வில் விலக்கு தருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கூற முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று உங்களால் பட்டியல் போட முடியுமா?
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசை திருப்பல் என்று கூறினால், இவை அனைத்திற்கும் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களிடம் நீங்கள் ஏன் கூறவில்லை?
இங்கு இருக்கும் சிலரை மிரட்டி கூட்டணி அமைத்த உங்களால் வெற்றிபெற முடியுமா? உங்களுடன் இருக்கும் அனைவரையும் சேர்த்து கொண்டு வாருங்கள். ஒரு கை பார்த்துவிடுவோம். தமிழர்களை நிறைய கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் பொறுப்பாக நடந்து கொள்ளாமல், எதிரி கட்சி போன்று செயல்படுகின்றனர். தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதுதான் சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணம்.
பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் குரல் தான் ஓங்கி ஒலிக்கிறது. அமித்ஷா மட்டுமல்ல எந்த 'ஷா' வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. சுயமரியாதை அதிகமாக கொண்டது தமிழ் மண்.
மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டப்பூர்வமாக உடைப்போம். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் உழைத்துக் கொண்டிருப்போம். டெல்லியின் ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான்" என்று தெரிவித்துள்ளார்.