தமிழக அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியை தடுத்து, அதனை மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கி, வெளிப்படையாகவே மிரட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை, பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக, PM Shri திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை, தமிழக அரசு ஏற்காததால் நிதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தின் கீழ் இணைந்தால், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த நேரிடும் எனக் கூறி அதில் இணைவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படவில்லை என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழகத்திற்கு எதிரான மத்திய பா.ஜ.க அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை!
தேசிய கல்விக் கொள்கை 2020 திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக, மத்திய அரசு வெளிப்படையாக மிரட்டல் விடுத்து, தமிழக மாணவர்களுக்கான ரூ. 2,152 கோடியைப் பறித்து, பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர். இது வற்புறுத்தலுக்குச் சற்றும் குறைவானதல்ல. உரிமைகளுக்காக நின்றதால் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளோம்.
ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்வியின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற எந்த அரசாங்கமும் இந்திய வரலாற்றில் இருந்ததில்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பா.ஜ.க மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.