சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ப. சிதம்பரம் குடும்பத்தினரால் பொது மக்களின் பயன்பாட்டிற்கு ரூ. 12 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்ததில் பெருமை அடைகிறேன். திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
ப. சிதம்பரம் கட்டி கொடுத்துள்ள நூலகத்தை திறந்ததில் பெருமையடைகிறேன். ப. சிதம்பரமே ஒரு நடமாடும் நூலகம் தான். எனக்கு பரிசாக கிடைத்த 2 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களை பல நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்த நூலகத்திற்கும் முதல்கட்டமாக ஆயிரம் புத்தகங்களை அனுப்பி வைக்க உள்ளேன். அரசு சார்பிலும் புத்தகங்கள் வழங்கப்படும்.
பல்வேறு உயரிய திட்டங்களால் உயர் கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும். இதற்காக இறுதிவரை சட்டப்போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.