லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ள இளையராஜாவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 2) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இளையராஜாவுடனான தனது உரையாடல் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 8-ஆம் தேதி லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை இளையராஜா நிகழ்த்தவுள்ளார். இதற்காக இளையராஜாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கியது குறித்து நெகிழ்ச்சியுடன் இளையராஜா பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, இச்சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதவில், "முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.