தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் இது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளையே இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. தமிழ்நாட்டிலும் 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், தமிழ்நாடு நாளில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றி 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகே அதிகாரபூர்வமாக தமிழ்நாடு என பெயர் பெற்றது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
"தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!
ஜூலை 18, 1967 தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்.”