/indian-express-tamil/media/media_files/2025/09/08/stalin-mk-2025-09-08-08-53-54.jpg)
ஜெர்மனி, பிரிட்டன் பயணம் நிறைவு: ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு - சென்னை திரும்பிய ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாட்டிற்கு ரூ.15,000 கோடி முதலீடுக்ளை ஈர்த்து, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை திரும்பினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், 8 நாட்கள் கொண்ட ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பது ஆகும். இதில் ரூ.15,516 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக விமான நிலையத்தில் பேட்டியளித்த ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்
பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் சாதி, மதம் மற்றும் வர்க்க பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“தமிழர்கள் உலக குடிமக்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மற்றும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கோட்பாடுகளை உலகுக்கு வழங்கியவர்கள் நாம். இந்தச் சொற்களுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும். சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை நம்மைப் பிரித்து, வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். எனவே, பிரிவினைவாதக் காரணிகளை நாம் ஒதுக்கித் தள்ள வேண்டும். நம்முடைய தமிழ் அடையாளத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது,” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
வெளிநாடு வாழ் தமிழர்களை, தமிழ்நாட்டின் "அதிகாரபூர்வமற்ற தூதர்கள்" என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மறையான பிம்பத்தை உலகளவில் ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும், அவர்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்வதைப் பாராட்டினார். “நீங்கள் தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும், தமிழ்நாடு உங்கள் வாழ்க்கையில் அங்கமாக இருக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டி, தமிழ் உணர்வை அவர்களுக்குள் வளர்க்கிறீர்கள். இதைப் பார்க்கும்போது, நம் மொழியை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள அழைப்பு
முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பைக் காண்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “நமது அரசு தற்போது பொருநை கண்காட்சி மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தில் ஒரு கண்காட்சியை உருவாக்கி வருகிறது. உங்கள் குழந்தைகளை இந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று நம் வரலாற்றின் பெருமையை உணர்த்துங்கள். அத்துடன், தமிழர்கள் கடந்து வந்த போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று அவர் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் கர்னல் ஜான் பென்னிக்குவிக்கின் சந்ததியினரையும், இங்கிலாந்தின் கிம்பர்லி நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் உறுப்பினர்களையும் சந்தித்தார். 2022-ஆம் ஆண்டு கிம்பர்லியில் பென்னிக்குவிக்கின் மார்பளவு சிலையைத் திறந்துவைத்ததற்கு அவர்கள் முதலமைச்சருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். ஐரோப்பியப் பயணத்தின் முடிவில், தமிழ்நாடு மக்களின் அன்பான நினைவுகளுடன் ஐரோப்பாவிலிருந்து திரும்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.