/indian-express-tamil/media/media_files/2025/03/21/jx85tDqrnsqxWtwJ8bLN.jpg)
மெட்ரோ 2-ம் கட்டத்தில் பிரமாண்ட மாற்றம்: ஜி+2 கட்டமைப்பில் வணிக வளாகங்களுடன் நிலையங்கள்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட நிலையங்கள், முதல் கட்டத்திலிருந்த எளிய அணுகல் புள்ளிகளிலிருந்து மாறுபட்டு, பயணிகளின் வசதியையும் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டையும் (Integrated Property Development) இலக்காகக் கொண்டு பல அடுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் அமைய உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), 2-ம் கட்டத்தின் 3-வது வழித்தடத்தில் (மாதவரம்-சோழிங்கநல்லூர்) உள்ள உயர்மட்ட நிலையங்களில், இத்தகைய 17 புதிய நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை அமைக்கவுள்ளது.
ரூ. 250 கோடி செலவில் 17 நிலையங்கள்
நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட 9 நிலையங்களில் இந்த 17 கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 250.47 கோடி செலவிடப்படும். இதுகுறித்து, சி.எம்.ஆர்.எல்-லின் திட்டப்பணிகள் இயக்குநர் டி. அர்ச்சனன் கூறியதாவது;
"முதல் கட்டத்தில், நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் எளிமையாக இருந்தன. ஆனால், 2-ம் கட்டத்தில், வணிக ரீதியான மேம்பாட்டிற்குத் திட்ட வடிவமைப்பின்போதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்புகள் ஒவ்வொன்றிலும், சுமார் 8,500 சதுர அடி பரப்பளவு உள்ள வணிக வளாகங்கள் 2 அடுக்குகளில் இருக்கும். இந்த புதிய G+2 (தரைதளம் மற்றும் 2 தளங்கள்) கட்டமைப்பின் செலவு, ஒன்றுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை இருக்கும். இது முதல்கட்ட கட்டமைப்பின் செலவை விட மிக அதிகம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதுடன், பயணக் கட்டணம் அல்லாத பிற வழிகளில் வருவாயை ஈட்டுவதற்காகப் பல நுழைவு வாயில்களில் பிரத்யேக போக்குவரத்து சார்ந்த இடங்களை (Transit-Oriented Spaces) உருவாக்குவதும் ஆகும்.
இந்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம், பிரிட்ஜ் அண்ட் ரூஃப் கம்பெனி (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. சி.எம்.ஆர்.எல் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சித்திக் முன்னிலையில், திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் கம்பெனியின் பொது மேலாளர் டி. ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தக் கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்படும் போது, மெட்ரோ நிலையங்களுக்கு எளிதான அணுகலை வழங்குவதோடு, சில்லறை வர்த்தகம் மற்றும் வணிக வசதிகளையும் ஒருங்கிணைத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.