ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எவ்வித தடையும் இன்றி குறித்த நேரத்தில் பயணத்திற்காக மெட்ரோ ரயிலை சென்று சேரும் பொருட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ஏசி வசதியுடன் கூடிய சீருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தரமணியில் உள்ள டைடல் பார்க் மற்றும் ராமானுஜம் ஐடி பார்க்கில் பணிபுரியும் ஊழியர்கள், சின்னமலை மெட்ரோ ரயில் ஸ்டேசனை எளிதில் அடையும் பொருட்டு, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சீருந்து இயக்கப்பட உள்ளது. ரூ. 20 இதற்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மட்டுமே, ஐடி நிறுவனங்கள் இயங்குவதால், இந்த சீருந்து சேவையும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை என வாரநாட்களில் மட்டுமே இயக்கப்பட உள்ளது.
ஐடி ஊழியர்களின் வசதிக்காக, இந்த சீருந்துகளை, ஐடி பார்க் வளாகத்திலேயே நிறுத்தும் பொருட்டும், ஐடி பார்க் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிஎல்எப் ஐடி பார்க் ஊழியர்களுக்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் ஸ்டேசனுக்கு இந்த சீருந்து சேவை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், அசோக் நகர் மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் கார் வசதி நடைமுறையில் உள்ளது.
வரும் காலங்களில். சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கும், இந்த சீருந்து சேவையை விரிவுபடுத்த உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.