கோவை மற்றும் மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு வழங்கியுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ. சித்திக் தெரிவித்தார்.
கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் தலைமையில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், கோவை மற்றும் மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் கூடுதல் தகவல்கள் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டதையடுத்து, கூடுதல் தகவல்களோடு தற்போது கோவை மற்றும் மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு வழங்கியுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஒப்புதலுக்குப்பின் செயல்படுத்தப்படவுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பேசியவர், கோவை மாநகர பகுதியில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளதாகவும், இதற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலையில் சுமார் 34.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 நிறுத்தங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி உள்ளதாகவும். இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மெட்ரோ திட்டம் அமையும் எனவும், அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மொத்தம் பத்து ஹெக்டர் நிலம் தேவைப்படுவதாகவும், நீலாம்பூர் பகுதியில் டிப்போ அமைப்பதற்கு தனியாக 16 ஹெக்டர் நிலம் தேவைப்படும் எனவும், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தடுத்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்புதல்கள் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்படும் எனவும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடையும் எனவும் கூறினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11,340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாராகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“