வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம் இருப்பதாகவும், கடன் பெறக் கூடாது என்ற கூட்டுறவுதுறையின் அறிவிப்பை ரத்து செய்யகோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தாங்கள் செய்த சாகுபடி பயிர்களின் அடிப்படையில் தற்காலிக கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். இதில், தற்காலிக குத்தகை சாகுபடியாளர், கோவில்நிலம், அரசு சார்ந்த நிலம் மற்றும் தனியார் நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அதில் அவர்களுக்கு நிலத்தின் பேரில் ஆதாரப்பூர்வமாக எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் கிராம நிர்வாகி அதிகாரி தரும் அடங்கல் அடிப்படையில் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்று மகசூல் காலத்திற்குப் பிறகு கடன்தொகையை அடைக்கின்றனர்.
வேளாண் கூட்டுறவு சங்கப்பதிவாளர் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விவசாயிகள் மற்றும் குறுத்தொழில் செய்பவர்கள் பெறும்கடன், அவர்கள் பெயரில் வங்கியில் சிபில் ஸ்கோர் (தனியார் வங்கிகள், தேசிய வங்கிகள், மத்திய மாநில அரசினால் பதிவுசெய்து கடன் வழங்குபவர்கள் போன்றவர்களிடம்) எந்தவொரு சிறுகடனும் நிலுவையில் இருந்தால் கடன்பெற இயலாத நிலையை அடைகின்றனர்.
இந்த சுற்றறிக்கையின் மூலம் விவசாயிகள் கடன்பெற இயலாதநிலை அடைகின்றனர். பெரு மற்றும் தொழில், சிறுதொழிற்சாலை தொடங்குபவர்களிடம் மட்டுமே பெறப்படும் சிபில் ஸ்கோர் வெளியே எங்கும் கடன் நிலவையில் இல்லை என்ற சான்று விவசாயிகளிடம் கேட்பது விவசாயிகளை முழுமையாக கடன் பெறுவதில் இருந்து அகற்றுவதற்கான ஒருமுயற்சியாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி, தாங்கள் செய்யும் சாகுபடி பயிர்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதனிடையே, உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் தரப்படவில்லை என்பதையும், கடன் நிலுவையில் இல்லை என்பதையும் உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்