தமிழகத்தில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்திற்கு கிடைக்க உடனே வழி செய்யுங்கள் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளார். நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி காலமும், இம்மாத இறுதியுடன் முடிவடைவதால் நெருக்கடி அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி கையிருப்பை, உடனடியாக அதிகரிக்காவிட்டால், சில அனல்மின் நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்திற்கு கிடைக்க நிலக்கரி, மற்றும் ரயில்வே அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.