போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நடிகர் கிருஷ்ணா கேரளாவில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் பிரசாத்திடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாங்கியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தி அவரது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், ரீகாந்த் 'கொகைன்' என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதேபோல், போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு நேற்று போலீசர் சம்மன் அனுப்பினர். அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது. இதனால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இடத்தை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.