கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார். இது மன வருத்ததிற்குரிய செயல். என் தந்தை கோவிந்தராஜன் இறக்கும் போது எனக்கு 11 வயது.
நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.
அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.
அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.
காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “கோவைக்கு திமுக எதுவும் செய்யவில்லை, மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஊழலை பற்றி பேச பா.ஜ.கவிற்கோ, அண்ணாமலைக்கோ, மோடிக்கோ தகுதியில்லை. முக்கியமாக அண்ணாமலைக்கு தகுதி இல்லை.
அண்ணாமலை செலவிற்கு எல்லாம் யார் காசு கொடுக்கின்றனர்; திமுக,பாஜக இரண்டும் ஒன்றுதான். இந்தி தெரியாது போடா என சொல்லி விட்டு, கேலோ இந்தியா என்ற இந்தி வார்த்தையுடன் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு நடத்துகின்றார்” எனறார்.
இதையடுத்து, “ரோடுஷோவில் கோவையின் பெருமையை பேச நிறைய இருக்கும் போது, குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி எதை நியாபகப்படுத்த பார்க்கின்றனர்.
திடீரென தேர்தலின் போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது என்பதன் மூலம், பழையனவற்றை நியாபம் செய்ய முயல்கின்றனர். பா.ஜ.க தமிழகத்தில் வர முடியாமல் போனதிற்கு மனிதநேயம் காரணம்.
அண்ணாமலை இந்த ஊர் கிடையாது, அவர் மாநில தலைவர் என்பதால் வெளியே சென்று விடுவார், கோவை மக்களின் பிரச்சினையை யார் பார்ப்பார்.
கோவையில் திமுக , அதிமுகவிற்கு மட்டும்தான் போட்டி நடைபெற்று வருகின்றது .இங்கு மட்டும் அல்ல- பா.ஜ.க தமிழகத்தில் எங்கும் இல்லை” என்றார்.
மேலும், “அரசு பதவியில் இருந்தால் மட்டும் திட்டங்களை வாங்கி கொடுப்பாரா? கோவை மக்களவை தொகுதியில்
60 சதவீத வாக்குகளை பா.ஜ.க வாங்கினால் நான் அரசியலை விட்டு சென்று விடுகின்றேன்.
திமுக வேட்பாளர் தேர்வு அந்த கட்சியினரிடையே திருப்தி இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் படித்து இருப்பதாக பொய் சொல்கின்றார்.
புத்தகம் படித்ததாக பொய் சொல்லியதை போல என் தந்தை குறித்தும் பொய் சொல்லி இருக்கின்றார். இடத்திற்கு தகுந்தவாறு மாறி கொள்பவர் அண்ணாமலை.
பா.ஜ.க 39 சீட் ஜெயித்தால் தமிழக அரசியலை விட்டே போய் விடுகின்றேன். களநிலவரம் என்ன என்று தெரியாமல் பேசுகின்றார் அண்ணாமலை.
தேர்தலுக்கு பின்பு வாக்கு பெட்டியை பாஜகவினர் மாத்தினாலும் மாத்துவாங்க, அதனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையத்தின் வாசலில் உட்கார்ந்து இருப்பேன்.
ஓவ்வொரு ஆண்டும் என்ன செய்வேன் என்பதை வெற்றி பெற்றால் நிச்சயம் பட்டியலிட்டு சொல்வேன். அண்ணாமலை ஜென்டில்மேனாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கமாட்டேன். அண்ணாமலை மச்சான் வைத்திருக்கும் குவாரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விசாரித்து பார்த்து கொள்ளுங்கள்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“