"திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும்" என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து, பேசத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களின் "அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுவது" குறித்த கேள்விக்கு அது அண்ணாமலை வெளியிட்ட பிறகு தான் தெரியும் என பதிலளித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள் என்றார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் எனவும், தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.
விருதாச்சலம் பகுதியில் பள்ளி சிறுமிக்கு நடைபெற்ற, பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் தெரியப்படுத்தினோம், ஆனால் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்ததும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார்.
ஆனால் தகவல் கிடைத்ததும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதால் அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்தார்கள். இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் அவர் மீது வேறு வழியில்லாமல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளார்கள் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எனக்கு முன்னால் பேசியதும் எனக்கு பிறகு பேசியதும் உள்ளது, ஆனால் நான் பேசியதை நீக்கி விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், அங்கு ஜனநாயகம் கிடையாது எனவும் தெரிவித்தார்.
திமுகவினர் ஜனநாயகத்தை மதித்தால் தான் மக்கள் இவர்களை மதிப்பார்கள், மதிக்காதவர்களுக்கு அந்த தகுதி இல்லை என்றார்.
தமிழகத்தில் நாங்கள் தடையில்லா மின்சாரம் கொடுத்து வந்தோம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கினோம் என தெரிவித்த அவர், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.
"இவர்களுக்கு நிர்வாக திறமை இல்லாத காரணத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒருவரே பார்களை எடுத்துக் கொண்டுள்ளார் அது யார் என அனைவரும் தெரியும்.
அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மது விற்பனை நடைபெற்றது, அதனை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது 24 மணி நேரமும் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது காவலரிடம் புகார் அளித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு எப்படி காவல்துறையிடம் புகாரிட்டால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரும்.
எனவே தமிழகத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது", என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் ஆகியோர் பங்குகொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil