இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணிகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, நேற்று பல்வேறு இந்தியர்கள் ஈரானிலிருந்து பத்திரமாக இந்தியா திரும்பினர்.
டெல்லி வந்தடைந்த அனைவரையும் மத்திய அரசு, அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அதன்படி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணபாலன், "நாங்கள் ஈரானில் உள்ள யாஸ் என்ற இடத்தில் இருந்து வந்துள்ளோம். அங்கு ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள நகரத்தில்தான் போர் பதற்றம் நிலவியது" என்று தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் அங்கிருந்து வருவதற்கான விமான கட்டணம், உணவு, தங்கும் விடுதி ஆகிய அனைத்து செலவுகளையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. நாங்கள் பணியாற்றிய நிறுவனமும் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்" என்று குணபாலன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கோவையை சேர்ந்த பத்மநாபன், "நானும் யாஸ் என்ற இடத்தில்தான் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். போர் பதற்றம் நிலவியதால் இங்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்திய அரசு எங்களை மிகவும் பாதுகாப்பாக அழைத்து வந்தது. எங்கள் நிறுவனத்தினரும் எங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், "மத்திய அரசு எங்களை அழைத்து வரும் முழுப் பொறுப்பையும் ஏற்றது. தமிழ்நாடு அரசும் தொடர்பு எண்களை கொடுத்து எங்கள் குடும்பத்தினருடன் பேசி மிகவும் உதவிகரமாக இருந்தனர். இந்திய அரசு அங்கு ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவில் நாங்கள் அனைவரும் இணைந்து அவர்கள் அறிவுரையின்படி இங்கு வந்துள்ளோம்" என்று பத்மநாபன் கூறினார்.
செய்தி - பி. ரஹ்மான்.