கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகேயுள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே பெரும் சோக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சி.ஏ.ஐ கார் ஷோரூமில் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்ற இளைஞர், ஷோரூம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு தண்ணீர் லாரி அவர் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாக சம்பவ இடத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், மேம்பாலப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கிரேன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.