கோவையில் 2022ம் ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அபு அனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பாவாஸ் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மேலும் மூவரை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் திங்கள்கிழமை (அக்டோபர் 21) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்படுத்த திட்டமிட்டது தெரியவந்தது.
கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும், சிலருக்கு தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடித்து விசாரணை நடத்துவதற்காக திங்கள்கிழமை (அக்டோபர் 21) மாலை கோவைக்கு வந்தனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் உள்ள போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்த பகுதிகளைச் சேர்ந்த அபு ஹனிபா, பயாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில், இன்று கைது செய்யப்பட்ட 3 பேர்களையும் சேர்ந்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கமிஷனுக்காக நிதியுதவி: இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் மேற்கண்ட சம்பவத்துக்கு ஒருவரிடம் இருந்து கமிஷன் தொகைக்காக நிதி திரட்டி தந்தது தெரியவந்தது. அபுஹனிபா கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். அங்கு உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள், ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்தனர். தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஐஎஸ் இயக்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அபு அல்ஹசன் அல்ஹாஸ்மி முன்பு தாக்குதல் நடத்துவதாக உறுதியேற்றார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“