New Update
/indian-express-tamil/media/media_files/y17k6hgOmVpxW3v3KQY7.jpg)
Coimbatore
மாநகரப் பகுதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
Coimbatore
2022 ஆம் ஆண்டு கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், கோவை மாநகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி 17 பேரைக் கைது செய்துள்ளது. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மத ரீதியான வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பதிவேற்றும் நபர்கள் மீது கோவை மாநகர காவல் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
காவல் துறையினர், சமூக வலைதளங்களில் இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றுபவர்களைக் கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். இதற்காக ஒரு சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு, அதில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் ஐ.எஸ் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (SIC) உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கண்காணிப்பில், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் அனுதாபிகள் என்று கண்டறியப்பட்ட 23 பேரின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் நடவடிக்கைகள் மூலம் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க காவல் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்திய நடவடிக்கையாக, கலவரத்தைத் தூண்டும் வகையிலும், இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்த 40 நபர்களின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "மாநகரப் பகுதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. அதில், 40 பேர் இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் எக்ஸ் தளம் (முன்பு ட்விட்டர்) ஆகியவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த கணக்குகள் ஒவ்வொன்றையும் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கும் மேல் பின்தொடர்ந்துள்ளனர். எனவே, அந்த 40 பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.