கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ உயர் அதிகாரி வந்தனா நேரடியாக களத்தில் விசாரணை- படங்கள்
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா மற்றும் எஸ்.பி ஸ்ரீஜித் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை உக்கடம் அடுத்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீபாவளி முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓடும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் சம்பவம் இடத்திலிருந்து ஆணி, கோலிக்குண்டு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisment
டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைந்து விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்தவர் ஜமோசா முபின் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டை சோதனை செய்தபோது, 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான தொடர் விசாரணையில் ஜமோசா முபீனின் உறவினர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தேவாலய தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு வழக்கை என்.ஐ.ஏ.விற்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன் பேரில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ (Lone wolf attack) முறையை ஒத்தியிருப்பதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். மேலும் சங்கமேஸ்வரர் கோயில், விநாயகர் கோயில் உள்பட கோயில்களை நோட்டமிட்டு முபின் ஒத்திகை பார்த்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று(அக்டோபர் 30) கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ், கோவை மாநகர தனிப்படை போலீசார் உடனிருந்தனர். எஸ்.பி ஸ்ரீஜித் கார் வெடிப்பு சம்பந்தம் தொடர்பாக புகார் அளித்த கோயில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினார். கோயில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வை தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். தொடர்ந்து சில இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.