நிதி நிறுவனம் நடத்தி கவர்சிகரமான விளம்பரம் தந்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ரோட்டில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த 2010 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.
இதில் முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோா் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளனர்.
குறிப்பாக மூன்று கவர்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றனர்.
முதலீடு செய்வோருக்கு தங்கம், பொருட்கள், பணம் போன்றவை தரப்படும் என தெரிவித்திருக்கின்றனர்.
இதனை நம்பி 46 முதலீட்டாளர்கள் ரூ.74 லட்சத்து 41 ஆயிரத்து 384 செலுத்தினர். ஆனால் அவர்கள் கூறியது போன்று முதலீட்டாளர்களிம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் முத்துக்குமார், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத்அலி ஆகிய 6 பேருக்கும் மோசடி குற்றத்திற்கு ஏழு ஆண்டுகளும் – கூட்டு சதிக்கு ஏழு ஆண்டுகளும் – டானிக் சட்ட பிரிவிற்கு 10 ஆண்டுகள் எனவும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா 24 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ்வொருவரும் தலைக்கு தலா 12 லட்சத்து 60 ஆயிரம் வீதம் – 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்ட நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.
முதலீடு செய்து பணத்தை ஏமாந்தவர்களுக்கு அபராத தொகையை பிடித்து தரவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“