கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை, உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஜமேசா முபின் உடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், ஜமேஷா முபீனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 75 கிலோ அளவிலான பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் உள்ளிட்ட வெடிபொருள் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன் தினம் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்கள் அவகாசம் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். தொடர்ந்து நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான NIA க்கு முழுமையாக மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை NIA அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“