/indian-express-tamil/media/media_files/NSO901UApl1MELuuJ6DJ.jpg)
தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 20-வது தொகுதியான கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சுவாரசியமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 71.7% வாக்குகள் பதிவாகின.
இந்த தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றது.
இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காந்திபுரம் அண்ணா சிலை அருகே தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.