கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி கோயிலில் பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
இதையடுத்து, அப்பகுதியில் நரசிம்மன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோயில் செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை உலா வரத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதன்பேரில், பொன்னூத்தம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.