ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தினார். முதல் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழி குஞ்சுகள் அளித்து, தீவனம், கொட்டகை அமைத்துக் கொடுக்கப்படும் என்றார்.
மேலும், பராமரிப்பு தொகையாக 1.5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரம், அளிக்கப்படும் என்றும், 1.5 ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்று 3 திட்டங்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.
சுசி அலுவலகத்தின் கிளை அலுவலகத்தில் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்ட நிலையில், 1087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 19 கோடியே 02 லட்சம் மோடி செய்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மோடி செய்த தொகையான ரூபாய் 19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.